செய்திகள்

வத்தலக்குண்டுவில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்

Published On 2018-08-30 14:23 GMT   |   Update On 2018-08-30 14:23 GMT
வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகள் கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக புகார் எழுந்துள்ளது.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு, மதுரை, பெரியகுளம், திண்டுக்கல் ஆகிய மெயின்ரோடுகளிலும், பஸ் நிலையம் பின்புறமுள்ள காந்திநகர் பகுதி, பேரூராட்சி அலுவலகம் உள்பட பல இடங்களில் சாலைஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தது.

இதனால் பெரும்பாலான சாலைகள் சுருங்கியே காணப்பட்டது. கொடைக்கானல், குமுளி, மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் வத்தலக்குண்டு வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

மேலும் முகூர்த்த நாட்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளில் விதிகளை மீறி அதிவேக மாக செல்லும் ஷேர்ஆட்டோக்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தமான செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 27-ந்தேதி இறுதிகெடு விதித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அன்று பெயரளவுக்கு மட்டுமே அளவீடு செய்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாக உள்ளது. ஆனால் சாலையோரங்களில் உள்ள ஏழை வியாபாரிகளிடம் மட்டும் அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வரவேற்க்கத்தக்கது. ஆனால் பெரும் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் ஏழை வியாபாரிகளிடம் மட்டும் கெடுபிடி காட்டி வருகின்றனர். திண்டுக்கல் சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக ஒரு ஓடை மற்றும் 2 சாலைகள் மாயமாகி உள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மெயின்ரோட்டில் உள்ள வியாபாரிகளிடம் மட்டும் தினந்தோறும் கடைகளை எடுக்கச்சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் நேர்மையான முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News