செய்திகள்

கோவில் ஊழியர்-வியாபாரியை தாக்கி பணம், நகை பறிப்பு

Published On 2018-08-30 13:33 GMT   |   Update On 2018-08-30 13:33 GMT
திண்டுக்கல்லில் கோவில் ஊழியர் மற்றும் வியாபாரியை தாக்கி பணம் மற்றும் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள நல்லமனார்கோட்டையைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 40). இவர் பெரியகுளம் கருப்பணசாமி கோவிலில் அறங்காவலராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையம் வந்தார்.

இரவு நேரம் என்பதால் அவரது ஊருக்கு செல்ல பஸ் கிடைக்கவில்லை. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் தான் கரூர் ரோட்டில் செல்வதாகவும், நல்லமனார்கோட்டையில் இறக்கி விடுவதாகவும் கூறியுள்ளார்.

அதனை நம்பி அவரது வண்டியில் சவுந்தரராஜன் ஏறினார். செல்லமந்தாடி அருகே வந்தபோது கீழே இறங்கி திடீரென சவுந்தரராஜன் தலையில் கல்லால் தாக்கி கீழே தள்ளினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் பணம், ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அவ்வழியே ரோந்து வந்த போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி இதே போல் வழிப்பறி நடைபெறுவதால் இரவு நேரங்கள் மட்டு மின்றி பகலிலும் பொதுமக்கள் நடமாட அச்சமடைந்துள்ளனர்.

இதேபோல் திண்டுக்கல் காந்திஜி புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாட்ஷா. (38). வியாபாரி. இவர் நேற்று இரவு தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் இரவு நேர வழிப்பறி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முகூர்த்த நாட்கள், பண்டிகை, விசே‌ஷ நாட்கள் அடுத்தடுத்து வரும் நிலையில் இரவு நேர கொள்ளையர்களை போலீசார் கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News