செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2018-08-30 08:25 GMT   |   Update On 2018-08-30 08:25 GMT
ஊத்துக்கோட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி ஊராட்சி பகுதியில் பால்ரெட்டி கண்டிகை கிராமம் உள்ளது.

இங்கு நீர்நிலை புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருக்கிறார்கள். இதனால் ஊத்துக்கோட்டை ஏரியிலிருந்து பேரண்டூர் ஏரிக்கு பாசன கால்வாய் வழியாக நீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

இது குறித்து விவசாயிகள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கோர்ட்டு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பரிந்துரைப்படி ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் ரவி, பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர்கள் பாலு, மதியரசன், அனுராதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஜே.சி.பி. எந்திரத்துடன் கிராமத்துக்கு சென்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடங்கிய போது அந்த வீடுகளுக்கு சொந்தமான பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திடீர் என்று வீடுகளை இடித்து விட்டால் நாங்கள் எங்கு செல்வது என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதையடுத்து அதிகாரிகள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். அதன்படி வருகிற 4-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகள் தானாக அகற்றி கொள்ள அவகாசம் கொடுத்தனர். எனவே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கவில்லை.

4-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தானாக அகற்ற வில்லை என்றால் 5-ந் தேதி ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்படும் என்றும் தாசில்தார் இளங்கோவன் எச்சரித்தார்.

Tags:    

Similar News