செய்திகள்

ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. திடீர் மரணம்

Published On 2018-08-27 10:30 GMT   |   Update On 2018-08-27 10:30 GMT
மகன் திருமண நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டிருந்த ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. திடீரென மரணம் அடைந்தார்.

ஈரோடு:

ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்தவர் மனோகரன் (வயது 57). பல்லடத்தில் சட்டம்- ஒழுங்கு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து பிறகு அங்கிருந்து ஈரோட்டுக்கு மாற்றப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது.

இவரது சொந்த ஊர் கோவை அருகே உள்ள சூலூர் கலந்தர் ஆகும். மனைவி பெயர் சுதா. இவரது மகனுக்கு கடந்த 25-ந்தேதி திருமணம் நடந்தது. விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தார். இன்று (திங்கட்கிழமை) திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. அதற்கான வேலைகளில் டி.எஸ்.பி. மனோகரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

இன்று காலை 11.30 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் பேரிடியாக விழுந்தது. திருமண வரவேற்பு வீடு துக்க வீடாக மாறியது.

மாரடைப்பில் இறந்த டி.எஸ்.பி. மனோகரன் உடலுக்கு போலீசாரும் உறவினர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். 

Tags:    

Similar News