செய்திகள்

கிருமாம்பாக்கம் அருகே பஸ் மோதியதில் 3 பேர் காயம்

Published On 2018-08-27 10:08 GMT   |   Update On 2018-08-27 10:08 GMT
கிருமாம்பாக்கம் அருகே பஸ் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:

கடலூர் மாவட்டம் சி.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் சையதுசமீ (வயது30). இவர் அங்கு உடற்பயிற்சி கூடம் (ஜிம்) நடத்தி வருகிறார். இவரும், இவரது உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் அதே பகுதியை சேர்ந்த பிரவின்குமார் (21) என்பவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து கொண்டு இருந்தனர்.

கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பம் என்ற இடத்தில் வந்த போது பின்னால் கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த பஸ் ரோட்டில் நடந்து சென்ற கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ராஜலட்சுமி (41) என்பவர் மீதும் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சையதுசமீ, பிரவின்குமார் மற்றும் ராஜலட்சுமி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News