செய்திகள்

ஆர்.எஸ்.மங்கலத்தில் 4 வயது சிறுவன் கடத்தல்? போலீசார் விசாரணை

Published On 2018-08-25 21:45 IST   |   Update On 2018-08-25 21:45:00 IST
வீட்டு முன்பு விளையாடிய சிறுவன், திடீரென மாயமானான். அவனை யாராவது கடத்திச் சென்றிருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பூவாணி கிராமத்தைச் சேர்ந்தவர் திருவாசகம், விவசாயி. இவருடைய மகன் விக்னேஸ்வரன் (வயது 4).

நேற்று விக்னேஸ்வரன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்த போது சிறுவனை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் விக்னேஸ்வரனை கண்டு பிடிக்க முடியவில்லை.

எனவே அவனை யாராவது கடத்திச் சென்றிருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவன் விக்னேஸ்வரனை தேடி வருகிறார்.

இதேபோல் ராமநாதபுரம் குயவன் குடியைச் சேர்ந்தவர் செந்தில் பிரசாத். இவருடைய மகள் பிரதீபா (19), கீழக்கரை தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர், கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கீழக்கரை அருகே உள்ள நல்லிருக்கை கோகுல் நகரைச் சேர்ந்தவர் பாலு மகள் பிரதீபா (21), ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து பாலு கொடுத்த புகாரின் பேரில் திருஉத்தரகோசமங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா வழக்குப்பதிவு செய்து மாயமான பிரதீபாவை தேடி வருகிறார்.

Tags:    

Similar News