செய்திகள்

தஞ்சையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2018-08-24 17:06 IST   |   Update On 2018-08-24 17:06:00 IST
தஞ்சையில் குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:

தஞ்சை மானோஜிபட்டி, முத்துநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு கடந்த சில வாரத்திற்கு முன்னர் அங்குள்ள குடிநீர் நீர்தேக்க தொட்டி பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் குடிதண்ணீர் இல்லாமல் அந்த பகுதியில் உள்ளவர்கள் அவதி அடைந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மானோஜிப்பட்டி மற்றும் முத்துநகர் பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலிகுடங்களுடன் ஈஸ்வரிநகர் சந்திப்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அங்கு மறியலில் ஈடுபட்ட பெண்கள் மறியலை கைவிட மறுத்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News