செய்திகள்

பண்ருட்டி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-08-24 11:00 GMT   |   Update On 2018-08-24 11:00 GMT
பண்ருட்டி அருகே கணவர் மது குடித்து வந்து தகராறு செய்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 32). தொழிலாளி.

இவரது மனைவி உஷா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

பெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் பெருமாள் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவரது மனைவி உஷாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனம் உடைந்த உஷா வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் உஷா அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு பெருமாள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி சென்று தீயை அணைத்து உஷாவை மீட்டனர்.

இருப்பினும் உஷாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு உஷாவை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உஷா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News