புதுவை சட்டசபை காவலர்களுடன் இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம் வாக்குவாதம்
புதுச்சேரி:
புதுவை சட்டசபை வளாகத்திற்குள் இரு சக்கர வாகனங்கள் அனு மதிக்கப்படுவதில்லை. அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இரு சக்கர வாகனங்களில் வந்தால் அவர்கள் மட்டும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வேறு யாருடைய வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் கட்சி நிர்வாகி தாமோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சட்டசபை வளாகத்திற்குள் வந்தார். அவரை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து சலீம் ஏன் சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? எப்போது முதல் இந்த விதிமுறை உள்ளது? என கேட்டார். சபை காவலர்கள் நேரடியாக பதில் கூறாமல், அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சலீம் அவர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து சபை காவலர்கள் வாகனத்தை அனுமதிக்க மறுத்தனர். இதனால் சலீம் சட்டசபைக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு சட்டசபை வளாகத்திற்குள் சென்றார். #puducherryassembly