செய்திகள்

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மருமகன் கண் எதிரே மாமனார் பலி

Published On 2018-08-23 09:57 GMT   |   Update On 2018-08-23 09:57 GMT
நடந்து சென்றபோது மருமகன் கண் எதிரே மாமனார் விபத்தில் பலியான சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
ராசிபுரம்:

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்தவர் போஸ் (வயது 58). வியாபாரி. இவர் ராசிபுரம் அருகேயுள்ள பிள்ளாநல்லூர் ராமலிங்க நகரில் உள்ள அவரது மகள் கிருஷ்ணவேனியின் (33) வீட்டுக்கு வந்திருந்தார்.

நேற்று இரவு 9.40 மணியளவில் அவரும், அவரது மருமகன் சிவசண்முகமும் நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு இருவரும் திரும்பிச் சென்றனர். அவர்கள் ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் வண்டிப்பேட்டை அருகிலுள்ள தனியார் பள்ளி எதிரில் சென்றபோது அவர்களுக்கு பின்னால் ஒருவர் வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் வியாபாரி போஸ் பலத்த காயம் அடைந்தார்.

மருமகன் சிவசண்முகம் லேசான காயம் அடைந்தார். பலத்த காயம் அடைந்த போசை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது போஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் பலியான போஸ் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ரத்தினவேல் என்பவரும் காயம் அடைந்தார். இவர் ராசிபுரம் அருகேயுள்ள நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான வியாபாரி போசுக்கு சண்முகசுந்தரம் (35) என்ற மகனும், கிருஷ்ணவேனி (33) என்ற மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News