செய்திகள்

வரதட்சணை கொடுமையால் பெண் பலி - கணவர் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

Published On 2018-08-22 16:37 GMT   |   Update On 2018-08-22 16:37 GMT
வரதட்சணை கொடுமையால் பெண் இறந்த வழக்கில் கணவர், மாமியார் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி குளிச்சோலை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் என்ற பாபு (வயது 42), தோட்ட உரிமையாளர். இவருக்கும், மஞ்சுளா என்பவருக்கும் திருமணமாகி தீரன் என்ற மகன் உள்ளார். தற்போது தீரனுக்கு 9 வயதாகிறது.

கடந்த 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் 23–ந் தேதி ஊட்டியில் ரோஸ்மவுண்ட் பகுதியில் பாபுவின் வீட்டில் மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது சம்பந்தமாக மஞ்சுளாவின் தந்தை மாரிச்சாமி தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் பாபு, மாமியார் உமாதேவி (62), அவரது மகள்கள் கவிதா (41), சங்கீதா (37) ஆகியோர் துன்புறுத்தியதால் இறந்தார் என்றும் ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து பாபு, உமாதேவி, கவிதா, சங்கீதா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

கடந்த 5 ஆண்டாக நடந்து வந்த வரதட்சணை கொடுமையால் இளம்பெண் இறந்த வழக்கில் நேற்று இரவு நீதிபதி முரளிதரன் தீர்ப்பு அளித்தார். அதில் பாபு, உமாதேவி, கவிதா, சங்கீதா ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.80 ஆயிரம் அபராத தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பாபு உள்பட 4 பேரும் ஜாமீன் வழங்கும்படி தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் பெற்றதும் 4 பேரும் கோர்ட்டின் பின்பக்கம் வழியாக சென்று அங்கு தயார் நிலையில் இருந்த காரில் ஏறி சென்று விட்டனர். வழக்கு தொடர்பாக நீதிமன்றம் முன்பு கார்களில் உறவினர்கள், வக்கீல்கள் திரண்டு இருந்தனர்.

Tags:    

Similar News