சத்தியமங்கலம் லாட்ஜில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் விஷ ஊசி போட்டு தற்கொலை
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் மைசூர் மகாதேவ புரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 36). இவர் நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வந்தார். பிறகு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
நேற்று காலை அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டார். அதன் பிறகு அறையை திறந்து அவர் வெளியே வரவே இல்லை.
இது குறித்து ஊழியர்கள் லாட்ஜ் மேலாளரிடம் கூறினர். லாட்ஜ் மேலாளர் முருகேசன் இது பற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு புகார் கூறினார்.
நள்ளிரவு 12 மணி அளவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அதிகாரி தவசியப்பன் ஆகியோர் முன்னிலையில் லாட்ஜ் அறையின் தாழ்பாள் உடைக்கப்பட்டது.
உள்ளே படுக்கையில் கோவிந்தசாமி பிணமாக கிடந்தார். அருகே ஊசி ஒன்று கிடந்தது. அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து இருப்பத தெரிய வந்தது.
அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரி சோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட கோவிந்தசாமியின் வீட்டுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் சத்தியமங்கலத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
கோவிந்தசாமி எதற்காக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்தார்? தொழில் ஏற்பட்ட நஷடத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் எதும் உண்டா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.