தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் தனியார் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 250 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.232 வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடனும், தனியார் நிர்வாகத்திடனும் பலமுறை கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு தொழிலாளர்கள் 50 பேர் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து அங்கு விரைந்து மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூடுதல் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
அதன்பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.