செய்திகள்

அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி

Published On 2018-08-18 11:55 GMT   |   Update On 2018-08-18 12:11 GMT
சென்னையை சேர்ந்த 3 வயது சிறுமி சஞ்சனா மூன்றரை மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக சாதனைக்கு முயன்றதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். #Chennai #Sanjana
சென்னை:

சென்னையை சேர்ந்த வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான அரிய முயற்சியில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகள் சஞ்சனா.

பிரபல கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சி அளித்து வருபவருமான ஷிஹான் ஹுசேனியிடம் பயிற்சி பெற்ற சிறுமி சஞ்சனா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளார். சமீபத்தில் சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கலைக்கல்லூரியில் இவரது கின்னஸ் சாதனை முயற்சி வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.



3 வயது சிறுமியான சஞ்சனா சுமார் 3 மணி நேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்து தனது வயதை கடந்த இலக்கை எட்டியுள்ளார். இதுகுறித்து சுட்டி சஞ்சனா பேசுகையில், இந்த முயற்சியின் போது தமக்கு சிறுதும் வலிக்கவோ அல்லது சோர்வடையவோ இல்லை என புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுமியை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வைப்பதே தங்களது இலட்சியம் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். சஞ்சனா எய்த அம்புகள் மிகச்சரியாக இலக்கை எட்டியதுபோல், வெகுவிரைவில் தமிழக வீராங்கனையாக சஞ்சனா தனது இலக்கை எட்டுவார் என அனைவரும் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். #Chennai #Sanjana
Tags:    

Similar News