செய்திகள்

தண்டராம்பட்டு அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 32 பேர் படுகாயம்

Published On 2018-08-18 10:08 GMT   |   Update On 2018-08-18 10:08 GMT
தண்டராம்பட்டு அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் உள்பட 32 பேர் படுகாயமடைந்தனர்.

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மெய்யூரை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொளக்குடி கிராமத்தில் கூலி வேலைக்காக ஒரே லோடு ஆட்டோவில் ஏறிச் சென்றனர்.

சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஆட்களை ஏற்றக் கூடாது என்ற போக்குவரத்து விதிகளையும் மீறி லோடு ஆட்டோ டிரைவர் பச்சூரை சேர்ந்த பஞ்சநாதன் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏற்றிச் சென்றார்.

அதிக பாரம் இருந்ததால் ஆட்டோ தள்ளாடியபடி சாலையில் சென்றுள்ளது. இதனை பொதுமக்கள் பலர் பார்த்து கண்டித்துள்ளனர். அதை மீறியும் டிரைவர் ஆட்டோவை இயக்கினார்.

அப்போது, நாச்சானந்தல் என்ற கிராமத்தில் ஆட்டோ சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த பெண்கள் உள்பட 32 பேர் படுகாயமடைந்தனர்.

தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

மேலும் போக்குவரத்து விதிமீறி அதிக பாரத்தை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியதாக ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News