செய்திகள்

முதலியார்பேட்டையில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-08-17 10:11 GMT   |   Update On 2018-08-17 10:11 GMT
முதலியார்பேட்டையில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை லட்சுமிநகர் சுந்தர்ராஜன் வீதியை சேர்ந்தவர் முகில்வாணன் (வயது41). சிவில் என்ஜினீயரான இவர் காண்டிராக்டு எடுத்து கட்டிடங்களை கட்டி கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு லதா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

மகளுடன் மனைவி பிரிந்து சென்றது முதல் முகில்வாணன் மனவருத்தத்தில் இருந்து வந்தார். மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்தார். ஆனாலும் மனைவி-மகள் பிரிந்து சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாமல் முகில்வாணன் தினமும் தவியாய் தவித்து வந்தார். அவருக்கு அவரது தாய் ரத்தினபாய் ஆறுதல் கூறி சமாதனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் மனைவி-மற்றும் மகள் பிரிந்து சென்றதில் இருந்து சோகத்தில் இருந்து வந்த முகில்வாணன் தற்கொலை செய்து கொள்ள முடிவுக்கு வந்தார். நேற்று மதியம் அவரது தாய் வீட்டில் சமையல் வேளையில் ஈடுபட்டு இருந்த நிலையில் முகில்வாணன் வீட்டின் அறைக்கதவில் உள்ள இரும்பு கம்பியில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் சிவராம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News