செய்திகள்

தூத்துக்குடியில் தீக்குளித்து பெண் தற்கொலை- கணவர் கைது

Published On 2018-08-17 10:03 GMT   |   Update On 2018-08-17 10:03 GMT
தூத்துக்குடியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மீனாட்சிபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). நிலதரகர். இவருடைய மனைவி ராஜகிருஷ்ணவேணி (42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் செண்பகதேவிக்கு திருமணம் செய்து வைக்க, ராஜகிருஷ்ணவேணி தனது சொந்தத்தில் உள்ள ஒரு பையனை பார்த்ததாகவும் அவர் கிராமப்புறத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதில் சுகுமாருக்கு உடன்பாடு இல்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜகிருஷ்ணவேணி காலை 6 மணிக்கு வீட்டில் இருந்த சமையல் எண்ணெயை தனது உடம்பில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தற்கொலை செய்து கொண்ட ராஜகிருஷ்ணவேணியின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சுகுமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News