செய்திகள்
குன்னூரில் இன்று அதிகாலை 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு
குன்னூரில் 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் போலீசார் தேடி வருகிறார்கள்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் வீதியில் அரவிந்தன், ஜெகதீஸ், சசிகுமார், அபுதாகிர் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று இரவு வீட்டு முன்பு தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றனர். இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு சென்றனர். மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிவதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 4 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. இது குறித்து 4 பேரும் குன்னூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.