செய்திகள்

நகைக்காக மூதாட்டி கொலை: பக்கத்து வீட்டு பெண்கள் 3 பேர் கைது

Published On 2018-08-16 16:56 GMT   |   Update On 2018-08-16 16:56 GMT
எருமப்பட்டி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பக்கத்து வீட்டு பெண்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி, 

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி கங்கானித் தெருவில் வசித்து வந்தவர் சண்முகம். இறந்து விட்டார். இவருடைய மனைவி அமராவதி(வயது 70). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அமராவதி தனது 2-வது மகன் ஞானபிரகாசம் மற்றும் மகள் ராஜேஸ்வரி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 9-ந்தேதி காலை மகனும், மகளும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் அமராவதி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அமராவதி அணிந்திருந்த 4பவுன் செயின், காதில் கிடந்த ¾பவுன் தோடு, பீரோவில் இருந்த 10பவுன் நகையும் திருடப்பட்டிருந்தது.

இது குறித்த புகாரின்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அமராவதி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த ஜோதி(31) என்ற பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜோதி, அதேபகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் தேவிகா(34), மலையாளி மனைவி பூங்கோதை(35) ஆகியோர் சேர்ந்து நகைக்காக மூதாட்டி அமராவதியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், நகைகளை திருடியதும் தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 14பவுன் நகைகளும் மீட்கப்பட்டது.
Tags:    

Similar News