பெருங்களத்தூர்-பல்லாவரத்தில் இளம்பெண்-என்ஜினீயரை தாக்கி செல்போன் பறிப்பு
தாம்பரம்:
பெருங்களத்தூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் ஜமுனாராணி. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கால்சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு அவர் பணிமுடிந்து வீட்டுக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பெருங்களத்தூர் இரணியம்மன் கோவில் அருகே வந்தபோது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர்.
திடீரென அவர்கள் ஜமுனா ராணியை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர். முகத்தில் பலத்த காயம் அடைந்த ஜமுனா ராணி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லாவரம், மல்லிகா நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். சாப்ட்வேர் என்ஜினீயர். ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.
நேற்று இரவு 11 மணி அளவில் அவர் பணிமுடிந்து பல்லாவரம் பஸ்நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் குமாரை தாக்கி செல்போனை பறித்து தப்பினர்.
இந்த இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.