செய்திகள்
ஒட்டன்சத்திரம் அருகே டீக்கடைக்குள் புகுந்த கார்
ஒட்டன்சத்திரம் அருகே டீக்கடைக்குள் கார் புகுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே கொசவப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (வயது29). இவர் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் டீக்கடை வைத்துள்ளார்.
நேற்று ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்பு சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.
அங்கு டீக்குடித்துக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த அய்யாவு மற்றும் சின்னான் ஆகியோர் மீது கார் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொல்லிமலை வாலவஞ்சிநாட்டை சேர்ந்த கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.