செய்திகள்

சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் ஓடும் ரெயிலில் ரவுடி மர்ம மரணம்

Published On 2018-08-12 14:53 GMT   |   Update On 2018-08-12 14:53 GMT
சுசீந்திரம் பகுதியை சேர்ந்த ரவுடி ஓடும் ரெயிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

சுசீந்திரம் அருகே உள்ள கீழகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). இவர் மீது சுசீந்திரம், கோட்டார் போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக ரவுடி கணேசன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். 

அந்த ரெயில் மதுரை அருகே வந்து கொண்டிருந்த போது திடீர் என்று கணேசன் மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் மற்ற பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதைத் தொடர்ந்து அவரது பிணம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனையில்தான் தெரியவரும். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News