மீஞ்சூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள வள்ளுவர் நகர் மணலி சாலையில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை.
நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா வயரை துண்டித்தனர்.
பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாறையால் உடைக்க முயன்றனர். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இன்று காலை ஏ.டி.எம். மையத்துக்கு வந்த வாடிக்கையாளர்கள் எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று மாலை தான் ஊழியர்கள் பணம் நிரப்பி சென்று இருக்கிறார்கள். கொள்ளையர்களால் எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் தப்பியது.
கண்காணிப்பு கேமிராவின் வயரை துண்டிப்பதற்கு முன்பு மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகும் காட்சி பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அதே பகுதியில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கடந்த ஆண்டு கொள்ளை முயற்சி நடந்தது. அடுத்தடுத்து ஏ.டி.எம். மையத்தை மர்மகும்பல் குறி வைப்பது வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.