காஞ்சீபுரத்தில் உரக்கடை வியாபாரியிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் எம்.எம். அவென்யூவில் வசித்து வருபவர் ஹரிகரன். இவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உரக்கடை நடத்தி வருகிறார். தினமும் இரவு கடையை மூடிவிட்டு காமராஜர் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று இரவு அவர் விற்பனை பணம் ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தார். பணத்தை பையில் வைத்து வண்டியின் முன் பகுதியில் தொங்க விட்டு இருந்தார்.
காமராஜர் சாலையில் வந்து கொண்டு இருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ஹரிகரன் வண்டியில் தொங்க விட்டிருந்த ரூ. 3 லட்சம் இருந்த பணப்பையை பறித்தனர்.
இதில் நிலைதடுமாறிய ஹரிகரன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். கீழே விழுந்ததில் ஹரிகரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஹரிகரன் தினமும் பணத்தோடு வீடு திரும்புவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்களை பிடிக்க விஷ்ணு காஞ்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.