மெரினாவில் கடலில் மூழ்கி 2 பேர் பலி
சென்னை:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நரேஷ் குமார், கமலேஷ். இருவரும் பாரிமுனை தங்க சாலையில் தங்கி இருந்து இரும்பு கதவுகள் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்தனர்.
நேற்று மாலை 6 மணி அளவில் நரேஷ் குமாரும், கமலேசும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். அங்கு பொதுப்பணி துறை அலுவலகம் எதிரே இருவரும் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கினர். தண்ணீரில் மூழ்கிய 2 பேரும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டனர்.
கடற்கரையில் இருந்த இளைஞர்கள் சிலர் 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. நரேசும், கமலேசும் கடலில் மூழ்கினர். உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலையில் நரேஷ்குமாரின் உடல் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கமலேசின் உடலை தேடி வருகிறார்கள்.