செய்திகள்

பெண்ணாடம் அருகே விபத்து- திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை பலி

Published On 2018-08-05 13:14 GMT   |   Update On 2018-08-05 13:14 GMT
திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த திருமலை அகரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்தார்.

இந்த நிலையில் பெரியசாமிக்கும், கொள்ளத்தங்குறிச்சி பகுதியை சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டின் பெற்றோர்களும் முடிவு செய்தனர். அதற்காக பெரியசாமி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெரியசாமிக்கும், விஜயகுமாரிக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் நந்திமங்கலம் சென்றிருந்தார்.

அங்கிருந்து பெரியசாமி சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இரவு 9.50 மணியளவில் அவரது மோட்டார் சைக்கிள் திருமலையகரம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது பெண்ணாடத்தில் இருந்து தாழநல்லூர் நோக்கி சென்ற அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பெரியசாமி தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச் சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பெரியசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News