செய்திகள்

கடன் பிரச்சினை: தாய் - 2 குழந்தைகளை கொன்று விவசாயி தற்கொலை

Published On 2018-08-05 10:31 GMT   |   Update On 2018-08-05 10:31 GMT
தாராபுரம் அருகே தாய்- 2 குழந்தைகளை கொன்று விவசாயி தற்கொலை செய்து கொண்டார். #dharapuramfarmersuicide

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கெத்தல்ரேவ் நடுப்பாளையம் செட்டி தோட்டத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (38). விவசாயி. இவரது மனைவி செல்வி (33). திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு ராஜலட்சுமி (11) என்ற மகளும், மாணிக்க சத்திய மூர்த்தி (4) என்ற மகனும் இருந்தனர். ராஜலட்சுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

முத்துச்சாமியுடன் அவரது தாய் மயிலாத்தாள் (70) என்பவரும் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முத்துச்சாமி தனது தாய் மயிலாத்தாளை வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்க விட்டார்.

பின்னர் தனது 2 குழந்தைகளையும் வீட்டில் விட்டத்தில் தொங்க விட்டு கயிற்றால் இறுக்கினார். இதில் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். அதன் பின்னர் முத்துச்சாமி வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள வேப்ப மரத்தில் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்துச்சாமியின் தந்தை வேலுச்சாமி அப் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவர் இன்று காலை மகன் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது மனைவி, மகன், பேரக் குழந்தைகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் குண்டடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தாராபுரம் டி.எஸ்.பி. வேலுமணி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் திருமலை ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.


பிணமாக கிடந்த 4 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

4 பேர் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கடன் பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. முத்துச்சாமி விவசாயத்திற்காக வங்கியிலும், மேலும் பலரிடமும் கடன் வாங்கி உள்ளார்.

எதிர்பார்த்த அளவு விவசாயம் அமையாததால் கடன் தொல்லையில் தவித்து வந்துள்ளார். இது பற்றி தனது மனைவி செல்வியிடம் கூறி இருக்கிறார். அவர் விவசாய நிலத்தை விற்று கடனை அடைக்கும் படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நேற்று கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபித்து கொண்டு செல்வி தனது தாய் வீடான ரங்கபாளையத்திற்கு சென்று விட்டார்.

கடன் பிரச்சினை , மனைவி கோபித்து சென்றதால் வேதனை அடைந்த முத்துச்சாமி தனது தாய், 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் தாராபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #dharapuramfarmersuicide

Tags:    

Similar News