செய்திகள்
மார்த்தாண்டத்தில் இன்று மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கிரானைட் தொழிலாளி பலி
மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கிரானைட் தொழிலாளி உடல் நசுங்கி பலியானார்.
குழித்துறை:
தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 45). இவர் வீடுகளில் கிரானைட் பதிக்கும் தொழில் செய்து வந்தார்.
இன்று காலை இவர் மேல்புறம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கிரானைட் பதிப்பதற்காக புறப்பட்டுச் சென்றார். தனது நண்பர் ஒருவருடன் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளின் பின்புறம் விஜயன் அமர்ந்திருந்தார். மார்த்தாண்டத்தை அடுத்த ஆலுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. விஜயன் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயன் உடலை மார்த்தாண்டம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காலை வேளையில் நடந்த இந்த கோர விபத்து மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலியான விஜயனுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.