செய்திகள்
லஞ்சம் கொடுத்தால் கூடுதல் மார்க் - அண்ணா பல்கலை. மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை
மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கூடுதல் மார்க் வழங்கிய விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலை. மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். #AnnaUniversity
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூடுதல் மார்க் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.
மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் தற்போதைய ஐடி துறை பேராசிரியையுமான உமா மற்றும் மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்திய 7 ஆசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூடுதல் மார்க் வழங்கிய விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலை. மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் செமஸ்டர் தேர்வில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக பெற்ற மாணவர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர். இதில் சுமார் 50க்கு மேற்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #AnnaUniversity