செய்திகள்

விமான பயணிகளுக்காக மெட்ரோ ரெயில் நிலையத்தில் 20 படுக்கை அறை வசதி

Published On 2018-08-03 04:14 GMT   |   Update On 2018-08-03 06:12 GMT
விமான பயணிகளுக்காக ஏர்போர்ட் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 20 படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறை வசதி விரைவில் அமைக்கப்படுகிறது. #MetroTrain
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ்., திருமங்கலம்-சென்ட்ரல் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

பயணிகள், பொதுமக்கள் இடையே பெரிதும் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

விமான பயணிகள் பெரும்பாலானோர் மெட்ரோ ரெயில் நிலையம் மூலம் எளிதில் விமான நிலையத்திற்கு சென்று வருகிறார்கள். இதனால் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

இந்தநிலையில் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் விமான பயணிகளுக்காக 20 படுக்கை அறைகளுடன் கூடிய ஓய்வு அறை வசதி விரைவில் அமைக்கப்பட உள்ளது. விமான பயணிகள் இந்த ஓய்வு அறை வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் பயணம் செய்வதற்காக வரும் விமான பயணிகள் வசதிக்காக விரைவில் 20 படுக்கை வசதி ஓய்வு அறை அமைக்கப்படுகிறது.

விமானத்துக்காக காத்திருக்கும் பயணிகள் ஓய்வு எடுக்க இந்த படுக்கையறை வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்-இந்திய விமான ஆணையகம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
Tags:    

Similar News