ஜெயங்கொண்டம் அணைக்கரையில் எம்.எல்.ஏ. ஆய்வு
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வடவார் தலைப்பில் வீராணம் ஏரிக்கு செல்லும் தண்ணீரை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கடந்த சில நாட்களாக கர்நாடகவில் பெய்ந்து வரும் மழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் அணைக்கரை வடவார் தலைப்பு மற்றும் கீழணைக்கு கடந்த 26- ந்தேதி இரவு 8 மணியளவில் வந்து சேர்ந்தது.
வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் அதிகம் வந்ததால் அன்று இரவே வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் நேரில் சென்று வடவார் தலைப்பில் இருந்து செல்லும் தண்ணீர் வினாடிக்கு 2,200 கன அடி வீதம் செல்வதை பார்வையிட்டார்.
வடவார் தலைப்பில் இருந்து வீராணம் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் 4.5 கோடியில் தூர்வாரும் பணி, தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பே நடந்து முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கீழணையில் இருந்து தற்போது வினாடிக்கு 2 ,200 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு குடி தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது அணைக்கரை-கீழணை உதவி செயற்பொறியாளர் அருணகிரி மற்றும் உதவி பொறியாளர் வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம், நகரசெயலாளர் செல்வராஜ், தண்டபாணி, மனோகரன், மாவட்ட தொழிற் சங்க துணை செயலாளர் ஜெயசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.