செய்திகள் (Tamil News)

ஊட்டி நகராட்சி பகுதியில் கலெக்டர் ஆய்வு

Published On 2018-08-01 11:21 GMT   |   Update On 2018-08-01 11:21 GMT
ஊட்டி நகராட்சி பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் சரியாக உள்ளதா? என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் சரியாக உள்ளதா? என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

முள்ளிக்கொரை பகுதியில் வசிக்கும் மக்களிடம் அடிப்படை வசதிகளான சாலைவசதி, குடிநீர்வசதி, மின்சார வசதி, தனிநபர் கழிப்பறை வசதி போன்றவை உள்ளனவா என்றும், சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் வீட்டுமனைப்பட்டா இல்லாதவர்கள் முறையாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் எனவும், வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற்று வீடு கட்டி தர முறையாக மாவட்ட நிர்வாகத்தை அணுகி பயன் பெறுமாறும் தெரிவித்தார்.

மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பை எடுக்க வரும் தூய்மை காவலர்களிடம் கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும், சுற்றுலாப்பயணிகளிடம் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுமாறும் அறிவுறுத்தினார்.

பின்னர் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயை பார்வையிட்டு அதை சுத்தம் செய்யுமாறும், பேருந்து நிலையத்திற்கு செல்லும் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றுமாறும் நகராட்சி ஆணையாளர்(பொ) ரவிக்கு உத்தரவிட்டார். அதன்டிப்படையில் நடைபாதை கடைகள் உடனடியாக அகற்றப்பட்டன. இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் (பொ) ரவி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News