செய்திகள்

காவலாளியிடம் லஞ்சம் பெற்ற வழக்கு - வன சரகருக்கு 3 ஆண்டு ஜெயில்

Published On 2018-07-31 16:05 GMT   |   Update On 2018-07-31 16:05 GMT
காவலாளியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் வன சரகருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஈரோடு:

கோபி வரப்பாளையம் அடுத்த எம்மாம்பூண்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் அந்த பகுதியில் உள்ள காவலாளியாக இருந்தார். இரவு பணி செய்ய வேண்டி இருந்ததால் அவர் பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தார்.

அவருக்கு துப்பாக்கி வழங்குவது தொடர்பாக விசாரிக்க சத்தியமங்கலம் வன அலுவலகத்துக்கு கடந்த 2-9-2005 அன்று உத்தரவு வந்தது.

வன சரகராக இருந்த விஸ்வநாதன் இது பற்றி விசாரித்தார். அப்போது துப்பாக்கி வழங்க பாலசுப்பிரமணியத்துக்கு அனுமதி கடிதம் கொடுக்க விஸ்வநாதன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க பாலசுப்பிரமணியத்துக்கு விருப்பம் இல்லை. எனவே அவர் இது தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் பாலசுப்பிரமணியம் சத்தியமங்கலம் வன அலுவலகத்துக்கு சென்றார்.

அந்த பணத்தை வனசரகர் விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை விஸ்வநாதன் பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் விஸ்வ நாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு மோகன் இன்று தீர்ப்பு கூறினார்.

லஞ்சம் பெற்ற வழக்கில் வன சரகர் விஸ்வநாதனுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அரசு பணியை முறையாக செய்யாததால் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு மோகன் தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
Tags:    

Similar News