செய்திகள்
செஞ்சி அருகே ஓமியோபதி மருத்துவம் படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். #fakedoctorarrested
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரத்தை சேர்ந்தவர் கல்யாண்குமார் (வயது 57) ஓமியோபதி மருத்துவம் படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்தார். ஆனால் அவர் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.
அதன்அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சுந்தர்ராஜி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் அனந்தபுரத்தில் உள்ள அந்த கிளினிக்கிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த கிளினிக்கை நடத்தி வந்த கல்யாணகுமார் (வயது 57) என்பவர் ஓமியோபதி படித்து முடித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் கல்யாணகுமாரை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த ஆங்கில மருந்துகள், சிரஞ்சு உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கல்யாணகுமார் தற்போது அனந்தபுரம் நகர தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #fakedoctorarrested