அரியாங்குப்பம் அருகே லாரியில் ஏற்றிய போது மின் கம்பியில் இரும்பு குழாய் உரசி கொத்தனார் பலி
புதுச்சேரி:
பண்ருட்டி அக்ரவல்லியை சேர்ந்த கொத்தனார்கள் விமலக்கண்ணன் (வயது 25). ஸ்ரீனிவாசன் ஆகியோர் புதுவையில் தங்கி இருந்து கட்டுமான பணி வேலை பார்த்து வந்தனர்.
அரியாங்குப்பம் மண வெளி கட்டபொம்மன் நகரில் வீடு கட்டுமான பணி நடந்தது. இங்கு அவர்கள் பணியாற்றினார்கள். மேல் மாடி கட்டுமான பணிக்கு பயன்படுத்திய இரும்பு குழாய்களை அகற்றி அவற்றை இருவரும் லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
ஸ்ரீனிவாசன் மேல் மாடியில் இருந்து இரும்பு குழாய்களை எடுத்து கொடுக்க, கீழே நின்ற விமலக்கண்ணன் அவற்றை ஒவ்வொன்றாக வாங்கி லாரியில் ஏற்றினார்.
அந்த இடத்துக்கு மேலே மின்கம்பி சென்றது. விமலக் கண்ணன் இறக்கிய இரும்பு குழாய் ஒன்று அந்த மின் கம்பி மீது திடீரென உரசி விட்டது. இதில் அவர் உடல் மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.
இது தொடர்பாக அரியாங்குப்பம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews