செய்திகள்
தற்கொலை செய்த சித்ரா-கைதான ஆட்டோ டிரைவர் அருண்

பணம் கேட்டு சித்ரவதை செய்ததால் மனைவி தற்கொலை- கணவர் கைது

Published On 2018-07-25 06:27 GMT   |   Update On 2018-07-25 06:27 GMT
சோழிங்கநல்லூர் அடுத்த காரம்பாக்கத்தில் பணம் கேட்டு சித்ரவதை செய்ததால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்:

சோழிங்கநல்லூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் அருண் (38). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சித்ரா (32).

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். பின்னர் அருண் தினமும் இரவு குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 மாதங்களுக்கு முன்பு சித்ரா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த அருண் மீண்டும் குடித்து விட்டு சித்ராவை துன்புறுத்தி உள்ளார். சொந்த ஆட்டோ வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் வேண்டும். அதை தாய் வீட்டில் வாங்கி வா என்று கூறி மனைவியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி சித்ரா போனில் அவருடைய தாயிடம் சொல்லி கதறி அழுதுள்ளார். கணவரின் நடவடிக்கைகளால் மனம் உடைந்த சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும், கண்ணகிநகர் போலீசார் அங்கு சென்று சித்ராவின் உடலை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரித்த போலீசார் மனைவியை சித்ரவதை செய்ததாக கூறப்படும் ஆட்டோ டிரைவர் அருணை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News