செய்திகள்

காசிமேட்டில் மனைவியை அடித்து கொன்ற மீனவர்

Published On 2018-07-23 07:35 GMT   |   Update On 2018-07-23 07:35 GMT
சென்னை காசிமேட்டில் குடும்பத் தகராறில் மீனவர் தனது மனைவியை அடித்து கொன்ற சம்பவம் குறித்து உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:

சென்னை காசிமேடு திடீர் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மீனவர். இவரது மனைவி லட்சுமி (28). இவர்களுக்கு இலக்கியா என்ற மகனும், ஓவியா என்ற மகலும் உள்ளனர். கோவிந்த் ராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார்.

கடந்த 19-ந்தேதி அன்று அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. லட்சுமியை அடித்ததில் அவர் மயங்கி விழுந்தார்.

இதுபற்றிய தகவல் லட்சுமியின் தந்தை ஆறுமுகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மயங்கிய நிலையில் இருந்த லட்சுமியை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு புகார் கொடுத்தார். அதில் வரதட்சணை கேட்டு தன் மகளை கோவிந்தராஜும், அவரது உறவினரும் அடித்து துன்புறுத்தி வந்தார்கள்.

குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து அடித்து உதைத்து இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் கோவிந்தராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அவரது உடலை வாங்க மறுத்து லட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மகளின் சாவுக்கு காரணமான கோவிந்தராஜ், அவரது உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதனால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் மகள் உயிரிழந்தாள் என்றும் குற்றம் சாட்டினர். #tamilnews
Tags:    

Similar News