செய்திகள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2018-07-22 21:50 IST   |   Update On 2018-07-22 21:50:00 IST
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நேற்று விசைப்படகுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு செல்லும் விசைப்படகுகளின் தகுதி குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு நேற்று காலையில் நடந்தது. ராமேசுவரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், மதுரை மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாதபாண்டியன் ஆகியோர் தலைமையில் நாகப்பட்டினம், கன்னியாகுமரி, குளச்சல், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 18 மீன்வளத்துறை அதிகாரிகள் வந்தனர்.

இந்த ஆய்வின் காரணமாக நேற்று விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், வேம்பார், வீரபாண்டியபட்டினம் ஆகிய 3 இடங்களில் விசைப்படகுகளை ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 258 விசைப்படகுகள், வேம்பாரில் 37 விசைப்படகுகள், வீரபாண்டியபட்டினத்தில் 6 விசைப்படகுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது, படகுகளின் நீளம், அகலம், மோட்டார் திறன், பழுது ஏதும் உள்ளதா? கடலுக்குள் செல்ல இந்த படகு தகுதியானது தானா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த பணி நேற்று மாலை வரை நடந்தது. 
Tags:    

Similar News