தேவாரம் பகுதியில் மக்னா யானை மீண்டும் அட்டகாசம்
உத்தமபாளையம்:
தேவாரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதியில் மக்னா யானை சுற்றித்திரிகிறது. இந்த யானை அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் சில உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளது.
எனவே இந்த யானையை வனத்துறையினர் விரட்டவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக பொள்ளாச்சியில் இருந்து தனிப்படை வந்தது. இருந்தபோதும் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது இந்த மக்னா யானையின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளது.
தேவாரம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தோட்டத்திற்குள் புகுந்த மக்னாயானை மாமரங்களை பிடுங்கி வீசியது. அப்பகுதியில் இருந்த மாட்டுக் கொட்டகையை சேதப்படுத்தி சென்றுவிட்டது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன அலுவலர் ஜீவனா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
மக்னா யானையின் அட்டகாசத்தால் விவசாயிகள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். எனவே இந்த யானையை விரைந்து பிடிக்கவேண்டும் என வலியுறுத்திஉள்ளனர்.