உடுமலையில் இருந்து கேரளாவுக்கு சிறுத்தை தோல் கடத்த முயன்ற 2 பேர் கைது
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட ருத்ராபாளையம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு சிறுத்தை தோல் கடத்தபடுவதாக அமராவதி வனத்துறையினருக்கு வந்த ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து உத்திரவின் பேரில் அமராவதி வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனவர் கோபிநாத் உள்ளிட்ட வனத்துறையினர் ருத்ராபாளையம் குளத்து பகுதியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 37), மற்றும் பாலுச்சாமி (70)என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கையில் வைத்து இருந்த பையில் சிறுத்தை தோல் இருந்தது. விசாரணையில் கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து இருந்த சிறுத்தை தோலை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோல் பல ஆண்டுகளாக பதப்படுத்தப்பட்ட 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தை தோல் இருக்கும் , மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா செய்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்று கூறினர்.