செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published On 2018-07-14 16:27 GMT   |   Update On 2018-07-14 16:27 GMT
காங்கேயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருப்பூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன்(வயது 29). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள ஒரு தேங்காய் உலர்களத்தில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு 14 வயது சிறுமியை மதியழகன் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க அந்த 14 வயது சிறுமியின் தங்கையான 12 வயது சிறுமியிடமும் மதியழகன் ஆபாச படங்களை காட்டி பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சகோதரிகள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டிற்கு சென்றுள்ளனர்.

இவர்களை பார்த்த ஒருசிலர் இதுகுறித்து ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அந்த சிறுமிகளை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுமிகள் மதியழகனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியது தெரியவந்தது.

இதுகுறித்து காங்கேயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி கைது செய்தனர். பின்னர் சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது 14 வயது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மதியழகன் மீதான வழக்கு விசாரணை திருப்பூர் லட்சுமிநகரில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மதியழகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.
Tags:    

Similar News