செய்திகள்

திண்டுக்கல் அருகே கணவன்-மனைவியை வெட்டிய முகமூடி கொள்ளை கும்பல்

Published On 2018-07-13 12:19 GMT   |   Update On 2018-07-13 12:19 GMT
திண்டுக்கல் அருகே நகை, பணத்தை தராததால் கணவன்-மனைவியை வெட்டிய முகமூடி கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள செம்பட்டி பாறைப்பட்டியை சேர்ந்தவர் மாயப்பன் (வயது50). விவசாயி. இவரது மனைவி பேச்சியம்மாள் (45). இவர்களுக்கு சசிகுமார் (15) என்ற மகனும் சிவசத்தியா (13) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மாரியப்பன் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது இருட்டான பகுதியில் சிலர் நிற்பதை பார்த்து யார்? என கேட்டார். ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை. தனது கணவர் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பேச்சியம்மாள் வெளியே வந்தார். அப்போது முகமூடி அணிந்த 5 பேர் அவர்களை சுற்றி வளைத்தனர்.

பேச்சியம்மாளிடம் அவர் அணிந்த நகைகளை கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே அரிவாளால் அவரை வெட்டினர். இதை தடுக்க வந்த கணவர் மாயப்பனையும் அரிவாளால் வெட்டினர்.

தனது பெற்றோர்கள் அலறல் சத்தம்கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சசிக்குமார் வெளியே வந்தார். அவரை கீழே தள்ளி விட்டு கொள்ளை கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News