செய்திகள்

பனப்பாக்கத்தில் வனக்காவலர் வெட்டிக்கொலை- மகன் வெறிச்செயல்

Published On 2018-07-13 13:25 IST   |   Update On 2018-07-13 13:25:00 IST
பனப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற வனக் காவலரை மகனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 69). ஓய்வுபெற்ற வனக்காவலர். இவருடைய மகன் சாந்தசீலன் (40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

சாந்தசீலன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியிருந்தார். இதனால், ஓய்வுபெற்ற வனக்காவலர் மாசிலாமணி மட்டும் தனியாக தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், தந்தை மாசிலாமணியிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு சாந்த சீலன் தொந்தரவு செய்து வந்தார். மாசிலாமணி பணம் தர முடியாது என்றதால் சாந்தசீலன் தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தார்.

நேற்றிரவும் குடித்துவிட்டு போதையில் வந்த சாந்தசீலன் ரூ.2 லட்சம் கொடுக்க மறுத்த தந்தை மாசிலாமணியை அடித்து, உதைத்தார். மேலும் ஆத்திரம் அடங்காமல் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் தலை மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்ததில் மாசிலாமணி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து, அங்கிருந்து சாந்தசீலன் தப்பி ஓடி விட்டார். இன்று காலையில், நண்பர்களுக்கு போன் செய்து தந்தையை வெட்டிவிட்டேன். அவர் என்ன நிலையில் இருக்கிறார்? என்று பார்க்க சொன்னார்.

நண்பர்கள் சென்று பார்த்த போது, மாசிலாமணி கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டனர். தகவலறிந்த பாணாவரம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மாசிலாமணியின் உடலை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொன்ற சாந்தசீலனை வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News