செய்திகள்

புகார் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்: ரே‌ஷன் கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் கைது

Published On 2018-07-08 08:52 GMT   |   Update On 2018-07-08 08:52 GMT
பொருட்களின் எடையளவு குறைவு தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரே‌ஷன் கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பட்டி ரேசன் கடையில் முத்துப்பாண்டி என்பவர் பொருட்களை வாங்கி உள்ளார். எடையின் அளவு குறைவாக இருந்ததால் ஆத்திரமடைந்த முத்துபாண்டி மற்றும் புதுப்பட்டி பொதுமக்கள் விற்பனையாளரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

இதையடுத்து கான்பா நகரைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது31) என்பவர் ரேசன் கடை சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் விற்பனையாளர் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த புதுப்பட்டி ரேசன் கடையின் விற்பனையாளரான நெற்குப்பையை சேர்ந்த ராமச்சந்தின் (43), தனது நண்பர் ஏகப்பன் (24) மூலம் தங்கபாண்டிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஏகப்பன் பேசியதை அப்படியே பதிவு செய்த தங்கபாண்டி ஆதாரத்துடன் திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதையடுத்து, ராமச்சந்திரன், ஏகப்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்

Tags:    

Similar News