செய்திகள்

அரசுக் கல்லூரியில் குழந்தை பெற்ற மாணவிக்கு சீட் கொடுக்க மறுத்த கல்லூரி முதல்வர்

Published On 2018-07-07 10:56 GMT   |   Update On 2018-07-07 10:56 GMT
காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் குழந்தை இருப்பதால் கல்லூரியில் சேர்க்க முடியாது என கல்லூரி முதல்வர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த குள்ளன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி கவுதமி. இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்தார். கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டில் அவரது குடும்பத்தினர் கவுதமிக்கு திருமணம் செய்து விட்டதாலும் அதனைத் தொடர்ந்து குழந்தை பிறந்ததாலும் கடந்த ஒரு வருடமாக அவரால் படிப்பை தொடர முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் எம்.காம். படிக்க வேண்டும் என்று தனது கணவர் பழனிவேலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கவுதமியை மேற்படிப்பு படிக்க அனுமதித்துள்ளார். இதனை தொடர்ந்து கவுதமி காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.காம். படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார்.

பின்னர் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது தனது 4 மாத கைக்குழந்தையுடன் வந்த கவுதமியிடம் எம்.காம். சீட் கொடுக்க முடியாது, நீ குழந்தை வைத்திருப்பதால் எப்படி படிக்க முடியும்? இதனால் உனக்கு சீட் வழங்க முடியாது என்று கூறி கல்லூரியின் பொறுப்பு முதல்வர் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் கவுதமியிடம் குழந்தை வைத்து உள்ளதால் படிக்க முடியாது என எழுதி வாங்கிக் கொள்ளும்படி சம்பந்தபட்ட பேராசிரியர்களிடம் கூறியதாக தெரியவந்தது. ஆனால் மாணவி கவுதமி கடிதம் எழுதி கொடுக்க மறுத்ததுடன் இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கும், உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகனுக்கும் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதோடு கவுதமிக்கு எம்.காம். சீட் வழங்கி மேற்படிப்பை தொடர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகாருக்குள்ளான கல்லூரியின் பொறுப்பு முதல்வர் கடந்த ஆண்டில் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சீட் வழங்கியதாக பெற்றோர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் அமைச்சர் அன்பழகன் அவரை நேரில் அழைத்து கண்டித்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News