செய்திகள்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை வருகை- 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

Published On 2018-07-06 06:47 GMT   |   Update On 2018-07-06 06:53 GMT
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று புதுவை வந்தார். துணை ஜனாதிபதியின் புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #VenkaiahNaidu
புதுச்சேரி:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று புதுவை வந்தார்.

சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கார் மூலம் காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் வெங்கையா நாயுடு கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். அங்கு மதிய உணவுக்கு பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

இன்று மாலை இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் கட்டப்பட்டு உள்ள உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம், விடுதி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை கம்பன் கலையரங்கில் நடைபெறுகிறது. அதில் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் மீண்டும் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர் செல்லும் சாலைகளின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு 50 அடி தூரத்துக்கு ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். #VenkaiahNaidu
Tags:    

Similar News