செய்திகள்

நெய்வேலியில் பாதுகாப்புபடை வீரர் வீட்டில் தங்கிய சிறுமி மாயம்

Published On 2018-07-05 12:21 GMT   |   Update On 2018-07-05 12:21 GMT
பாதுகாப்புபடை வீரர் வீட்டில் தங்கிய 15 வயது சிறுமி மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிறுமியை தேடி வருகிறார்கள்.

நெய்வேலி:

நெய்வேலி புதுநகர் 22-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் வீரேந்திரகவுதம் (வயது 38). இவரது மனைவி அனுராதா (32). இவர்களுக்கு 2 வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

கணவனும், மனைவியும் நெய்வேலி மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். கணவனும், மனைவியும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனிக்க ஆள்இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து வீரேந்திரகவுதம் தனது சித்தப்பா மகள் பலாக் (15) என்ற சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். வீரேந்திரகவுதமும், அனுராதாவும் வேலைக்கு சென்றிருந்தபோது குழந்தையை சிறுமி பலாக் கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் கணவனும், மனைவியும் வேலைக்கு சென்றிருந்தனர். இரவு அவர்கள் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது குழந்தை மட்டும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தது. பலாக்கை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை. இதனைத்தொடர்ந்து நெய்வேலி தெர்மல் போலீசில் அனுராதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமி பலாக்கை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News