செய்திகள்

சாயல்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பெண்கள் பலி

Published On 2018-07-05 04:01 GMT   |   Update On 2018-07-05 04:01 GMT
சாயல்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார்.
சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள சிக்கல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஓடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காஞ்சி. இவரது மனைவி அங்கம்மாள் (வயது 68). அதே பகுதியைச் சேர்ந்த வர்கள் செல்வராஜ் மனைவி ராமாயி (43), முருகவேல் மனைவி சண்முக வள்ளி (55).

இவர்கள் 3 பேரும் தினமும் அதிகாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தலாக்கல் கண்மாய் கரையில் தண்ணீர் பிடிக்கச் செல்வது வழக்கம்.

இன்று அதிகாலை 3 பேரும் வழக்கம் போல் அங்கு தண்ணீர் பிடித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் 3 பேர் மீதும் பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் அங்கம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமாயி, சண்முகவள்ளி ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

இதைப்பார்த்த அந்தப்பகுதியினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராமாயி பரிதாபமாக இறந்தார். சண்முகவள்ளி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக் டர் முகமது நசீர், சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News