செய்திகள்

திருப்பத்தூர் அருகே மணல் லாரி மோதி 2 பேர் பலி

Published On 2018-07-02 09:49 GMT   |   Update On 2018-07-02 09:49 GMT
திருப்பத்தூர் அருகே பைக் மீது மணல் லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகேயுள்ள காக்கங்கரை ஆற்று பகுதியில் மணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லாரி, டிராக்டர்களில் மணல் கடத்தி செல்கின்றனர். இன்று மதியம் ஒரு டிப்பர் லாரி மணல் கடத்தி கொண்டு காக்கங்கரை பஸ் நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது, திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சி கிரா மத்தில் இருந்து சிறுவன் உள்பட 3பேர் ஒரே பைக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வேலம்பட்டி கொட்டாவூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். காக்கங்கரை பஸ் நிறுத்த வளைவில் பைக் மீது மணல் கடத்தல் லாரி மோதியது.

இந்த கோர விபத்தில் போச்சம்பள்ளி கொட்டாவூரை சேர்ந்த மணி, மோட்டு என்ற 2 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் வந்த குனிச்சியை சேர்ந்த சிறுவன் வேலு மகன் பூவரசன் (வயது 26) படுகாயமடைந்தார்.

சிகிச்சைக்காக சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய மணல் கடத்தல் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கந்திலி போலீசார் இறந்தவர்களின் 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News