செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் - வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published On 2018-06-23 12:52 IST   |   Update On 2018-06-23 12:52:00 IST
திருச்சி விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் ரூ.16 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த அசாருதீன், உள்ளாடைக்குள் மறைத்து ரூ.3.10 லட்சம் மதிப்புள்ள 101 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் சென்னையை சேர்ந்த முகமது அஜீஸ் என்பவரும் ரூ.6.61 லட்சம் மதிப்புள்ள 183 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடத்தல் தங்கங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு விமானம் ஒன்று புறப்பட இருந்தது. முன்னதாக அதில் செல்ல இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது யாசிம் (வயது 36) என்பவர் டாலர்,யூரோ என இந்திய மதிப்பில் ரூ.8.03 லட்சம் வெளிநாட்டு பணம் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News